நாம் கர்த்தரை அறியாத காலங்களில் நம்மை தேவன் சந்தித்தபோது “நீ பாவியாய் இருக்கிறாய், மனந்திரும்பு” என்றார். உடனே நாம், “நான் பாவியல்ல, நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்ததில்லை. மற்றவர்களைவிட நான் நல்லவன்தான்” என்று முரண்டு பிடித்தோம். பின்னர் கர்த்தருடைய கிருபையாலும் ஆவியானவரின் கிரியையாலும் கண்கள் திறக்கப்பட்டு நாம் பாவியென உணர்ந்து “யெஸ் லார்ட், நான் பாவிதான்” என்றோம். அடுத்த வினாடியே மீட்பின் கதவு திறந்தது. இரட்சணியத்தின் சந்தோஷத்தைப் பெற்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
இப்போது மீட்கப்பட்டாயிற்று, “மகனே, நீ இப்போது நீதிமானாய், பரிசுத்தவானாய் இருக்கிறாய்” என்று தேவன் சொல்லுகிறார். உடனே நாம், “இல்லை ஆண்டவரே, நான் அதே பழைய பாவிதான், குப்பை, தூசு, புழு, அழுக்கான கந்தை” என்று மீண்டும் முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறோம். வசனத்தின் வெளிச்சத்துக்கு நமது கண்கள் திறக்கப்பட்டு, நமது சுய முயற்சியால் அல்ல, சுய நீதியால் அல்ல, கிறிஸ்துவுக்குள் நாம் தேவநீதியாக இருக்கிறோம் என்ற சத்தியத்தை உணர்ந்து, “யெஸ் லார்ட், நாம் கிறிஸ்துவுக்குள் தேவநீதியாக இருக்கிறேன்” என்பதை விசுவாசித்து அறிக்கை செய்வோமானால் அடுத்த வினாடியே ஜெயத்தின் கதவு திறக்கும். தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும் என்ற வசனம் சொல்லும் மேன்மையான அனுபவத்துக்குள் கடந்து செல்லுவோம்.
தேவன் என்ன சொல்லுகிறாரோ அதற்கு “யெஸ் லார், நீர் சொல்லுகிறபடிதான்” என்று ஒப்புக்கொடுப்போமானால் வேதம் சொல்லும் மகத்துவமான அனுபவங்களை நமக்கு சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.