விஜய்குமார் ஜெயராஜ்

எதிரி வீழ்ந்தாயிற்று…

யூதர்கள் அவரை அடித்தார்கள், அவர் திருப்பி அடிக்கவில்லை
ரோமர்கள் அவரை அடித்தார்கள், திருப்பி அடிக்கவில்லை.
முகத்தில் துப்பினார்கள், பயமுறுத்திப் பார்த்தார்கள்
துளிகூட எதிர்ப்பில்லை…

முள்முடி சூட்டினார்கள்,
வாரினால் உடலைப் பிளந்தார்கள்,
சிலுவையில் அறைந்தார்கள்
அவரிடம் எதிர்வினையே இல்லை…

எதிரிகளிடம் தானே எதிர்வினை ஆற்ற வேண்டும்
இவர்கள் யாரும் எதிரியல்ல..
அவர் தனது எதிரியின் வரவுக்காகக் காத்திருந்தார்!

கடைசியாக அவன் வந்தான், பெயர் திருவாளர் மரணம்…
எல்லோரும் அடிக்கிறார்களே என்று துணிவாக அவர் மீது கைவைத்தான்.
திருப்பி அடித்தார்,
அடிவாங்கி சுருண்டு வீழ்ந்தவன் பின்னர் எழவேயில்லை…
மரணம் நித்தியமாக மரணித்துப் போனான்.
பரிகரிக்கப்படும் கடைசி சத்துரு மரணம்…

போரில் வெல்ல ஒட்டுமொத்த பெலிஸ்திய
ராணுவத்துடனும் யுத்தமிட வேண்டியதில்லை,
அவர்களின் ஆகச்சிறந்த மாவீரன் கோலியாத்
அவனை வீழ்த்தினால்
ஒட்டுமொத்த பெலிஸ்தியாவும் வீழ்ந்ததற்குச் சமம்!

மனுக்குலத்தின் மாபெரும் எதிரி வீழ்ந்தாயிற்று
இனி மற்ற எதிரிகளெல்லாம் எம்மாத்திரம்?

Exit mobile version