தேவனைப் பிரியப்படுத்தி அவரது அன்பைப் பெற வேண்டுமா? என்னவெல்லாம் செய்யணும், என்னவெல்லாம் செய்யக்கூடாது?
தேவனோடு உள்ள உறவை தக்கவைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்யணும், என்னவெல்லாம் செய்யக்கூடாது?
தேவனிடத்திலிருந்து ஆசீர்வாதங்களைப் பெற என்னவெல்லாம் செய்யணும், என்னவெல்லாம் செய்யக்கூடாது?
ஆபத்திலும், பிரச்சனையிலும் இருக்கும் தருணங்களில் தேவனுடைய ஒத்தாசையைப் பெற என்னவெல்லாம் செய்யணும், என்னவெல்லாம் செய்யக்கூடாது?
இப்படி ஒரு செக்லிஸ்ட் உங்களிடம் இருந்தால் அதை எடுத்து முதலாவது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் இருக்கும் உறவில் பொருத்திப் பாருங்கள்… பொருந்துகிறதா?
நாம் நமது பிள்ளைகளை நேசிப்பதும், அவர்களோடு உறவு கொள்வதும், அவர்களது தேவைகளை சந்திப்பதும், அவர்களுக்கு உதவிகள் செய்வதும் “இதையெல்லாம் செய்யணும், இதையெல்லாம் செய்யக்கூடாது” என்ற Rules-இன் அடிப்படையில் இல்லை, உங்களுக்கும் அவர்களுக்குமான “பெற்றோர்- பிள்ளை” என்ற அடிப்படையில்தான் இருக்கிறது என்பதை நமது சுபாவமே நமக்கு போதிக்கிறதல்லவா? பின்னர் இது தேவனிடம் மட்டும் எப்படி பொருந்தும்?
அப்படியானால் எப்படி வேண்டுமானாலும் வாழலாமா பிரதர்?
நிச்சயமாக இல்லை…உங்கள் பிள்ளை மோசமானவனாக இருந்தால் ஒரு நல்ல பெற்றோராக அவனை உங்கள் அருகில், உங்கள் கண்காணிப்பிலும் அரவணைப்பிலுமே வைத்து திருத்தி நல்ல மனிதனாக்க விரும்புவீர்கள். தேவனும் அதையேதான் செய்கிறார். புதிய ஏற்பாட்டு புத்திரசுவீகார உறவின் மேன்மை அது!
ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். (எபிரெயர் 4:16 )